
தேவையானவை:
முழு கோழி - இரண்டு
அரிசி - அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
எண்ணெய் - 50 மில்லி (கால் டம்ளர்)
பட்டை ஒரு விரல் நீளம் - இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - நான்கு
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முழு கோழியை சுத்தம் செய்யவும். அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
அதில் அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்றால் 3 3/4 அளவு வரும். நான்கு டம்ளராக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை அப்படியே போட்டு வேக விடவும்.
வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.
சட்டியை காயவைத்து அதில் எண்ணெய் பட்டரை ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை தாளித்ததில் ஊற்றவும் .
கொதிவந்ததும் அரிசியை தட்டி உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போடவும். இது தான் அரேபியர்களின் கப்ஸா சோறு.
Note:
இது சவுதி அரேபியா மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு. அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். பிரியாணிக்கு கூட மசாலா அவ்வளவாக இருக்காது. கோழியோ கறியோ முழுசாக சட்டியில் போட்டுத் தான் வேக விடுவார்கள். நோன்பு கஞ்சிக்கு கூட நாம் கீமா போடுவோம். அவர்கள் அப்படியே முழுசாக போட்டு ரொம்ப நேரம் வேக விட்டுச் செய்வார்கள். மசாலா அதிகம் சேர்க்க மாட்டார்கள். ஆனால் ரொம்ப மஸ்த்(வெவி) இந்த சாதம். செய்து பாருங்கள். சிலருக்கு கோழியை போட பிடிக்கவில்லையென்றால் அதை அப்படியே பட்டரில் வறுத்து மசாலா எதுவும் சேர்க்காமல் சாப்பிடுவார்கள்.
ஆக்கம் : சகோதரி ஜலீலா