"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 மார்ச் 2012

தாய்மார்கள் சுகப் பிரசவம் ஆக வேண்டுமா?

0 comments

இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனக்கு சிசேரியன்தான் ஆச்சு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. அந்தக் காலத்தைப் போல பிரசவ வலி எடுத்து, பிரசவிக்கும் வேதனையை அனுபவித்து, மறு பிறவி எடுத்து, கடும் போராட்டத்துக்குப் பின்னர் பெற்றெடுத்த குழந்தையின் முகம் பார்த்து பட்ட வேதனையையெல்லாம் அப்படியே மறந்து பூரிப்புடன் மகி்ழ்ச்சிப் பெருக்கில் அயர்ந்து போகும் பாக்கியம் நிறையப் பெண்களுக்குக் கிடைகப்பதில்லை. அதற்குக் காரணம், பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுவதுதான்.

அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப் பிரசவமே நடைபெறுகிறது. பிரச்சினை என்று வந்தால் மட்டுமே அங்கு சிசேரியனுக்குப் போகிறார்கள். ஆனால் 99 சதவீத தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்தான் கடைப்பிடிக்கப்படுகிறது.

இருப்பினும் இயற்கையான அதாவது சுகப் பிரசவமே நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இப்போதும் கூட சுகப் பிரசவம் சாத்தியமானதுதான். அதற்கு சில வழிமுறைகளை கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதைச் செய்தாலே போதும், சுகப் பிரசவமாக முடியும் என்கிறார்கள் அவர்கள்.

ஆரோக்கியமாக இருங்கள்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான முறையில் இருக்க பெண்கள் முயல வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதன் மூலம் உடல் தெம்பு அதிகரிக்கும், மன வலிமையும் கட்டுக்கோப்பாக இருக்கும். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது 40 யானைகளை கட்டி இழுப்பதற்குச் சமம் என்பார்கள் பெரியவர்கள். எனவே அந்த அளவுக்கு நமது உடலில் தெம்பும், வலிமையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்தானே. நல்ல சத்தான, போஷாக்கான, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு வருவது அவசியம்.

சாப்பிடுவதில் நேரம் தவறாமை

சாப்பிடுவதில் நேரம் தவறாமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மேலும் சரியான உணவையே சாப்பிடுவது அதை விட முக்கியமானது. பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நெடு நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டைம் வைத்துக் கொண்டு அந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது. மேலும் டாக்டர்கள் கூறும் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிப்பதும் நல்லது. கூடுமானவரை சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல, கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கும் நல்லது செய்கிறதாம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாம்.

நிறைய நடங்க

மற்ற சமயங்களில் எப்படியோ, கர்ப்ப காலத்தில், அதாவது தொடக்க மாதங்களுக்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்கள் நிறைய நடக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கிறோம், அதிகமாக வேலை செய்யக் கூடாது என்று அமைதியாக உட்கார்ந்தே இருந்தால் ஆபத்து. நீங்கள் கர்ப்பமாகத்தான் இருக்கிறீர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. எனவே கர்ப்ப காலத்திலும் நடை பயிற்சி உள்ளிட்டவை தேவைதான். அதை கைவிடக் கூடாது. வழக்கம் போல வேலைகளைச் செய்யலாம், காலை அல்லது மாலையில் நன்றாக நடக்கலாம். இல்லாவிட்டால் முதுகுப் பிடிப்பு உள்ளிட்ட பல சிரமங்களை சந்திக்க நேரிடுமாம். பிரசவ தேதிக்கு கடைசி நாள் வரை நடக்கலாமாம். நடைபயிற்சியானது, இயற்கையான பிரசவத்திற்கான பாஸ்போர்ட் என்கிறார்கள் டாக்டர்கள்.

உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தின்போது சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் எடுப்பது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறதாம். மேலும் பெண்களின் பிறப்புறுப்பை இளக்கமாக வைத்திருக்கவும், இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.

ஆலோசனை வகுப்புகள்

உடல் ரீதியான பலம் மட்டுமல்லாமல் மன ரீதியான பலமும் மிக அவசியம் என்பதால் கர்ப்பிணிகளுக்காகவே இப்போது ஆங்காங்கு நடத்தப்படும் ஆலோசனை வகுப்புகளுக்குப் போய் அட்வைஸ் கேட்கலாம். மேலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் கூட இதுபோன்ற வகுப்புகளை நடத்துகிறார்கள். அங்கு போகலாம். பிரசவம் என்றால் என்ன, எப்படி பிரசவம் நடைபெறுகிறது, குழந்தை எப்படி உருவாகி, எப்படி பிறக்கிறது, பிரசவத்தின்போது என்னென்ன செய்வார்கள், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது பிரசவம் குறித்து நமது மன நிலையை பக்குவப்படுத்த பெரிதும் உதவும்.

அந்தக் காலத்தில் வீட்டில் தவறாமல் ஒரு பாட்டி இருப்பார். குடும்பத்தில் யாராவது கர்ப்பம் தரித்தால் அந்தப் பாட்டிதான் ஆலோசகராக இருந்து பல அறிவுரைகளைக் கூறி தெம்பூட்டுவார். அது போக தனக்குத் தெரிந்த பாட்டி வைத்தியத்தை செய்து கர்ப்பிணிகளுக்குப் பேருதவியாக இருப்பார். என்ன சாப்பிட வேண்டும், எப்படி உட்கார வேண்டும், எப்படி எழுந்திருக்க வேண்டும், எப்படி படுக்க வேண்டும் என்பது முதல் கொண்டு அனைத்திலும் உதவியாக இரு்பபார்.

ஆனால், இப்போது பாட்டிளை எல்லாம் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் 'போட்டு விட்டனர்' இந்தக் கால தலைமுறையினர். எனவே இதுபோன்ற முக்கியமான அட்வைஸ்களைப் பெறும் வாய்ப்பு இப்போது கிட்டத்தட்ட இல்லாமலேயே போய் விட்டது. எனவே படித்தோ, நெட்டில் பார்த்தோ, டாக்டர்களிடம் கேட்டோதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இருந்தாலும் சிசேரியனை தவிர்த்து இயற்கையாக பிரசவிக்க முடியும் என்ற நம்பிக்கையை மனதில் வரித்துக் கொண்டு அதற்கான வழிகளை உரிய ஆலோசனையின் பேரில் கடைப்பிடித்தால் நிச்சயம் நீங்களும் சுகமாக, இயற்கையாக பிரசவிக்கலாம்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி