அமெரிக்கா 2007 - 2008 காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலமைகளில் இருந்து இன்னும் மீளாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்திகள் பாதிப்படைந்து வேலையின்மை வீதமும் ஒன்பது புள்ளி ஒரு சதவீதம் என மிக உயர்வாக காணப்படுகின்றது. அத்துடன் வரவு செலவு திட்ட பற்றாக் குறையும் மிகவும் பாதகமான நிலையில் உள்ளதுடன், சீனா போன்ற நாடுகளில் பெருமளவு கடன்களை பெற்று பொருளாதாரத்தினை இயக்கி வருகின்றது. இதனாலேயே அமெரிக்காவின் கடன் மீளளிக்கும் ஆற்றல் குறைக்கப்படுவதாக ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறாக அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிப்படையும் போதெல்லாம் முதலில் அடிவாங்குவது ஐ.அ.டொலரே. இந்த நிலையில், ஏனைய உலக நாடுகள் தமது ஒதுக்கம் அல்லது கையிருப்பில் பெரும் பகுதியினை ஐ.அ.டொலரில் பேணுகின்றன. இதனால் அவை விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அமெரிக்கப் பொருளாதாரம் தாக்கப்படும் போதெல்லாம் நெருக்கடி நிலைக்கு ஆளாகின்றன.
இவ்வாறு இருக்க, இலங்கையில் தற்போது முதலீடு தொடர்பான அச்சுறுத்தல் குறைவாக காணப்படுகின்றது; பொருளாதார வளர்ச்சி வீதம், பணவீக்க வீதம், வரவு செலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் பொதுப் படுகடன் தொடர்பாக திருப்தியளிக்க கூடிய நிலையினை கண்டுள்ளதால் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் இரண்டினால் (Moody’s Investors Service Singapore (Pvt) Ltd and Fitch Ratings) அண்மையில் இலங்கையின் கடன் மீளளிக்கும் ஆற்றல் 'BB-' என்பதில் இருந்து 'B+' ஆக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் ஒரு பில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான கடன் பிணைப் பத்திரங்களை இலங்கை
அரசு சர்வதேச நிதிச் சந்தையில் விற்பனை செய்திருந்தது.
இதேவேளை இலங்கையும் தனது ஒதுக்கு அல்லது கையிருப்பில் பெருமளவினை ஐ.அ.டொலரிலேயே பேணி வரும் நிலையில், தற்போது அமெரிக்க பொருளாதாரம் அல்லது ஐ.அ.டொலர் மீது எழுந்துள்ள சந்தேகமானது, இலங்கை அண்மையில் பெற்ற தரச் சாண்றினை கேள்வி குறியாக்கி உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
(என்.சிவரூபன்)