
நெல்லை அருகே உள்ளாட்சி தேர்தலில் பண விநியோகத்தைக் காட்டிகொடுத்தவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள எட்டாங்குளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் முத்துகோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர் நேற்று இரவு மானூரிலிருந்து ஊருக்குப் பேருந்தில் சென்றார். எட்டாங்குளத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் கம்பால் முத்துகோபாலகிருஷ்ணனை அடித்துக்கொன்றது. அதன்பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து தகவலறிந்ததும் மானூர் காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறை மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
எட்டாங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மடத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக பஞ். தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும், முத்து கோபாலகிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு சேகரித்ததாக தேர்தல் கமிஷனுக்கு யாரோ புகார் செய்துள்ளனர். முத்துகோபாலகிருஷ்ணன்தான் புகார் செய்துள்ளார் என்று செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருதினர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர்கள் முத்துகோபாலகிருஷ்ணனைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செல்வராஜ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம், கொம்பையா, மாயாண்டி, இசக்கிபாண்டி, மாடசாமி ஆகிய 6 பேர் மீது மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.