அன்பார்ந்த அதிரை வாக்காள பெருமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இது தேர்தல் பரப்புரையல்ல! மாறாக, உங்கள் விரல்களில் மை படுமுன் மனதில் இறுதியாக உறுதியாக தீர்மானிக்க கோரும் ஒரு வேண்டுதல் மட்டுமே.
இன்றுடன் பிரச்சாரங்கள், பேரணிகள் ஓய்ந்துவிட்டன.நாளைய தினம் உங்கள் சிந்தனைக்கான தினம், ஆம் நமது வார்டுகளை, நமது ஊரை குறித்து உங்களின் பொன்னான வாக்குகள் மண்ணாகி போய்விடாமல் சிந்திக்க வேண்டிய முக்கிய தருணம் என்பதை மறவாதீர்.
தமிழகத்தின் ஏனைய பகுதிகளை போலவே நமதூரும் ஏராளமான வேட்பாளர்கள் களம் காணும் ஒரு தேர்தலாய், புதிதாக முஹல்லா சங்கங்களும் நேரடி அரசியலில் ஈடுபடும் ஒரு களமாக இந்த உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. இடையில் காலங்கடந்த சில நன்முயற்சிகளும் எடுக்கப்பட்டு தோல்வியடைந்திருந்தாலும் எதிர்கால தேர்தல் நிலைப்பாடுகளுக்கு ஒரு முன்ணோட்டம் இட்டுச்சென்றுள்ளது என்றால் அது மிகையில்லை.
நமதூர் தொடர்பான இணைய, வலை தளங்களில் பெரும்பாலானவை தாங்கள் சார்ந்துள்ள சங்கம், தெரு, பிடித்த வேட்பாளருக்கு ஏற்றவாரே செய்திகளை வெளியிட்டுள்ளன அல்லது கருத்துத் திணிப்பில் ஈடுபட்டுள்ளன என்ற வருத்தத்தினாலேயே இந்த வேண்டுகோளை அதிரையின் வாக்காள பெருமக்களாகிய உங்கள் முன் அதிரை இஸ்லாமிக் மிஷன் [AIM] வைக்கின்றது. இதில் நமதூர் வலை திரட்டியை நடத்துகிறவர்களும் இன்னும் ஒரு சில அதிரை வலைஞர்களும் தேர்தல் குறித்து எந்த முட்டல் மோதல்களிலும் ஈடுபடாமல் அமைதி காத்தது மிகவும் பாராட்டிற்குறியது.
மின்னஞ்சல்கள் வழியாக ஒரு சிலர் தாங்கள் பகிரங்கமான தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட நிலையில் வேறு சிலர் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு ஒட்டுக் கேட்பதை கண்டித்த கேலிக்கூத்துகளும் பரப்பப்பட்டன. இன்னும் சிலர் ஊரை ஒன்று கூட்டி நமக்கெல்லாம் பாடம் நடத்தி விட்டு தெருப் படுகுழியில் விழுந்த வினோதங்களும் காண சகிக்காத காட்சிகளே.
தேர்தலுக்கு தேர்தல் என்று சொல்வதை விட நிமிடத்திற்கு நிமிடம் கூட்டணிகள் மாறும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பாரம்பரியம், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சைகள் என அனைவரும் தங்களுக்கேற்ற வசதியான வாக்குறுதிகளை வழங்கியிருப்பார்கள், முந்தைய சாதனைகளை முழங்கியிருப்பார்கள். இவை அனைத்தும் ஏட்டுச் சுரைக்காய்கள் என்பதை மறந்து விடாதீர்.
யார் வெற்றி பெற்றாலும் நமதூரை சேர்ந்த, நம்முடைய சகோதரன் தான் வெற்றி பெற்றுள்ளான் என முழுமனதோடு தேர்தல் முடிவுகளை ஏற்று அனைத்து பாகுபாடுகளுக்கும் விடையளிப்போம். இந்த தேர்தலால் நமக்கிடையே ஏற்பட்ட அரசியல் கசப்புணர்வுகள் கசாப்புக்கு அனுப்புவோம்;.
உங்களுடைய வாக்குகளை வரட்டு கௌரவங்களுக்கோ, தெரு பாகுபாடுகளுக்கோ, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கோ, கட்சி பேதங்களுக்கோ, தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கோ ஏற்றவாறு பதிவு செய்யாதீர். ஏனெனில், புதிதாக அமைய போகும் பேரூராட்சி மன்றம் முழுக்க முழுக்க நம்முடைய வரியில் தான் இயங்கப்போகிறது என்பது மட்டுமே உண்மை.
எனவே, உங்களுடைய வாக்குகளை செலுத்துமுன் ஊர் நலன், வார்டு நலனை மட்டுமே கருத்திற்கொண்டு நல்லவர்கள் யார், ஊரின் நன்மைக்காக செயல்படக்கூடியவர்கள் யார் என நன்கு சிந்தித்து வாக்களிக்குமாறு அதிரை இஸ்லாமிக் மிஷன் [AIM] சார்பாகவும் அதிரைஃபேக்ட்டும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி : AIM